Last Updated : 29 Mar, 2020 09:54 AM
Published : 29 Mar 2020 09:54 AM
Last Updated : 29 Mar 2020 09:54 AM

தொகுப்பு: தமிழ்
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதி. அவர் கற்றுத்தரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சமைக்க எளிமையானவை, சத்து நிறைந்தவை.
கொள்ளு சுண்டல்
ஒரு கப் கொள்ளுவையும் ஒரு கப் பச்சைப் பயறையும் இரவே ஊறவையுங்கள். இல்லையென்றால் காலையில் ஊறவைத்தால் மாலையில் செய்யலாம். கொள்ளுடன் பச்சைப் பயறைச் சேர்ப்பது நல்லது. கொள்ளு சூடு, பயறு அதை மிதப்படுத்தும். இரண்டையும் குக்கரில் வேகவைத்துத் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அரை டீஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். சுண்டலைச் சேர்த்து, உப்பு, பெருங்காயம், அரை மூடி தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். இஞ்சியைச் சேர்த்தால் சுவை கூடும். விரும்பினால் ஒரு மூடி எலுமிச்சைச் சாறு பிழிந்துகொள்ளலாம். வெயிலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும்.
FOLLOW US